சதுரகிரியில் இரவில் தங்க அனுமதி மறுப்பு; வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2023 03:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்களை அனுமதிக்கவும், கடைசி 3 நாட்கள் இரவில் மலையில் தங்கி நவராத்திரி பூஜையில் பங்கேற்க வனத்துறை அனுமதிக்காததை கண்டித்து சுந்தரபாண்டியத்தில் சாலிய சமுதாயத்தினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் உள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி வழிபாடு பூஜைகள் அக். 15 முதல் துவங்கி 24 வரை நடக்கிறது. இதில் 22 23 , 24 தேதிகளில் மட்டுமே பக்தர்கள் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இரவில் மலையில் தங்கி பொங்கல் வைக்கவோ, ஆடு, கோழி பலியிடவும் கூடாது என வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல நூற்றாண்டுகளாக தாங்கள் நவராத்திரி பூஜைகளை மலையில் தங்கி செய்து வருவதாகவும் வழக்கம்போல் இந்த ஆண்டும் அனுமதிக்க வேண்டும் என கோரி வருகின்றனர். வத்திராயிருப்பில் தாசில்தார் முத்துமாரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள, சாலியர் சமுதாய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், தங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என வனத்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து நேற்று இரவு முதல் சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய தெருக்களில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் சதுரகிரிக்கு நவராத்திரி பூஜையில் பங்கேற்க அனுமதிக்க கோரி, ஓரிரு நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக சாலியர் சமுதாய நிர்வாகி சடையாண்டி தெரிவித்தார்.