பதிவு செய்த நாள்
11
அக்
2023
03:10
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் எல்லை தெய்வத்திற்கு புது மண் சட்டிகளில் அசைவ படையல்களை ஊர்வலமாக தீப்பந்தம் ஏற்றி கொண்டு சென்று படைத்து வழிபட்டனர்.
மானாமதுரை அண்ணாத்துரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் புரட்டாசி மாதம் செவ்வாய் சாற்றுதல் விழாவை கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டிற்கான விழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியதையடுத்து கிராம மக்கள் விரதமிருந்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு செவ்வாய் சாற்றுதல் விழாவை முன்னிட்டு தேங்காய்,பழம், வெற்றிலை, பாக்கு,பணியாரம்,கொலுக்கட்டை, கறிச்சோறு ,நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து புது மண் சட்டிகளில் வைத்து தீப்பந்த விளக்குகளை ஏற்றி கிருஷ்ணராஜபுரம் மக்கள் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள குறத்தி அம்மன் கோவிலிலிருந்து கிளம்பி நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக எல்லை பிடாரியம்மன் கோவிலுக்கு வந்து அங்கு அம்மனுக்கு படையலை வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து மக்கள் கொண்டு வந்திருந்த அசைவ உணவுகளை தங்களது உறவினர்களோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.