பதிவு செய்த நாள்
12
அக்
2023
11:10
வாஷிங்டன், இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட பிரமாண்டமான ஹிந்து கோவில், அமெரிக்காவில் திறக்கப்பட்டது. புதுடில்லியில் அக்ஷர்தாம் அமைப்புக்கு சொந்தமான ஸ்ரீசுவாமி நாராயண் கோவில் நிர்வாகத்தினர், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திலும் இதேபோன்ற பிரமாண்ட கோவிலை கட்டி வந்தனர். ராபின்ஸ்வில்லே பகுதியில், 183 ஏக்கரில், 12 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த கோவில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு முறைப்படி திறக்கப்பட்டது. மஹராஜ் சுவாமிகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க, விழா வெகுவிமரிசையாக நடந்தது. வேத முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலில், 10,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்திய கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் இசைக்கருவிகளும், சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. கோவிலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நீள்வட்ட குவிமாடம், பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். கருவறையுடன் கூடிய பிரதானமண்டபம், 12 துணை கோவில்கள், ஒன்பது கோபுரங்கள், பிரமிடு வடிவிலான ஒன்பது கோபுரங்களுடன் பிரமாண் டமாக அழகிய வேலைபாடுகளுடன் இந்தக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோடை வெயில், மழை, குளிர் உட்பட எந்த கால நிலையையும் தாங்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த கிரானைட் மற்றும் பளிங்குக்கற்கள் கோவிலில் பதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு பகுதி இருந்து வந்த, 12,500 தன்னார்வலர்கள், பணிகளில் ஈடுபட்டனர். இக்கோயிலில் அக்.,18ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.