தசரா ஜம்புசவாரி ஊர்வலத்தில் ‘சந்திரயான் 3’ உள்ளிட்ட 36 அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. மைசூரு தசராவின் நிறைவு நாளன்று ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்து, அபிமன்யு யானை செல்லும். மற்ற 13 யானைகள் அதை பின் தொடர்ந்து வரும். குதிரைகளும் அணிவகுத்து செல்லும். கர்நாடகாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும், அலங்கார ஊர்திகளும் பங்கேற்கும். அதுபோல இந்த ஆண்டு ஜம்புசவாரி ஊர்வலத்தில், மைசூரு உட்பட 31 மாவட்ட பஞ்சாயத்துகளின் அலங்கார ஊர்திகள்; கர்நாடகா அரசின் ஐந்து துறைகளில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. பாகல்கோட் மாவட்ட பஞ்சாயத்து அலங்கார ஊர்தியில் பாதாமி சாளுக்கியர், பனசங்கரி தேவி கோவில்; பெங்களூரு மாவட்ட பஞ்சாயத்து அலங்கார ஊர்தியில் சந்திரயான் – 3 மாதிரி; மைசூரு அலங்கார ஊர்தியில் மைசூரு மருத்துவக்கல்லுாரி; பெலகாவி அலங்கார ஊர்தியில் மகாலிங்கேஸ்வர் கோவில்; ராம்நகர் அலங்கார ஊர்தியில் சென்ன ப்பட்டணா பொம்மைகள்; விஜயநகரா அலங்கார ஊர்தியில் விஜயவிட்டலா கோவில் ஆகியவை இடம் பெற உள்ளன.