பதிவு செய்த நாள்
12
அக்
2023
03:10
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற சிலை எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தலைசுமையாக சிலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் அய்யனார் கருப்பசாமி கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் சிலை எடுப்பு திருவிழா பிரசிதிபெற்றது. பக்தர்கள் தங்களது கஷ்டம் தீர்ந்துவிட்டால் சிலை செய்வதாக அய்யனார் கருப்பசாமியிடம் நேர்த்திகடனாக வேண்டி கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். அரசு பணி வேண்டும் என்றால் அரசுஊழியர், காவல்துறை ஊழியர், ராணுவவீரர் போன்ற சிலைகளும், விவசாயம் செழிக்கவேண்டினால் டிராக்டர், காளைமாடு சிலைகளும், விஷபூச்சிகள் தீண்டாமல் இருக்க நாகர்சிலை உள்ளிட்ட சிலைகளும் நேர்த்திகடனாக செய்வதாக வேண்டி கொள்வர். சிலைகள் வாகைகுளம் கிராமத்திலுள்ள கண்மாய் மண்ணில் மட்டுமே செய்யப்படும். வேண்டுதல் நிறைவேறியவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே சிலை செய்வதற்கு அந்தப் பகுதியில் சிலை செய்பவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுவர். இந்தாண்டிற்கான சிலை எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி மாலை 3 மணியளவில் சிலைசெய்யும் வீடுகளிலிருந்து பக்தர்கள் தாங்கள் வேண்டி கொண்ட சிலைகளை தலைசுமையாக ஏந்தியபடி ஊர்மந்தையில் ஊர்வலமாக வந்தனர். குறிப்பாக ஆசிரியர், ராணுவவீரர், அரசியல் தலைவர், டிராக்டர், ஆடு, மாடு சிலைகள், கருப்பணசாமி, அய்யனார் சாமிசிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை தலையில் ஏந்தியபடியே ஊர்வலமாக வந்து வயல்வெளிகளை கடந்து கண்மாய் கரையில் உள்ள கோயிலை அடைந்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர். திருவிழாவை காண மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கம்பம், திருச்சி, உசிலம்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.