பதிவு செய்த நாள்
12
அக்
2023
04:10
கொங்கு மண்டலத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான, ‘வள்ளி கும்மி’ ஆட்டம் மீண்டும் புத்துயிர் பெற்று, 80,000க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் தமிழர் கலைகள் அல்லது அந்தந்த பகுதிக்கான பாரம்பரிய கலைகள் என சிலம்பம், கோலாட்டம், வில்லு, கும்மி, மயிலாட்டம், காவடியாட்டம், கரகம், பொய்கால் குதிரை, பொம்மலாட்டம், உறியடி ஆட்டம், தேவராட்டம் என நீண்டு கொண்டே செல்லும். இவை ஒவ்வொருன்றும், அப்பகுதி மக்களின் வாழ்வுடன் இணைந்ததாக காணப்படும். அதுபோன்று, கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட சில மாவட்டங்களில், ‘வள்ளி கும்மி ஆட்டம்’ பல நுாறு ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கலையாக இருந்தது. கடந்த பல ஆண்டுக்கு முன் வரை, அக்கலை நிகழ்ச்சி எப்போதாவது, எங்காவது நடந்தது. அனைவருக்கும் பொதுவான கலை என்ற போதிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இக்கலைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, 80,000 பெண்களுக்கு பயிற்சி வழங்கி, அரங்கேற்றம் செய்து வருகின்றனர்.
கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கொங்கு மண்டலத்தில் விளை நிலங்களில் வேலை செய்தவர்கள், வீட்டுக்கு வந்தபின், தங்கள் உடல் வலி போக்கவும், மனதில் மகிழ்வுக்காக, ‘வள்ளி கும்மி ஆட்டத்தை’ நிகழ்த்தினர். பயிற்சியாகவும் எடுத்தனர். அது ஒரு வகையில் தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றது. உடலை கடுமையாக வருத்தாமல், வலி போக்கும் பயிற்சியாக நிகழ்த்தினர். அப்போது அதிகமாக ஆண்கள் தான், இதில் பங்கேற்றனர்; பெண்கள் குறைவுதான். தற்போது பெண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். பெண்களுக்கு தற்போது உடல் உழைப்பு குறைவதால், அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக, இந்த ஆட்டம் உதவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த ஆட்டம் தொய்வடைந்தது. கடந்த, 2009ல் கொ.ம.தே.க.,வின் மாநாடு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடந்தபோது, பிரமாண்டமாக வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்த்தி, மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டது. அப்போது வள்ளி கும்மி பாடல்கள் பாட, ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்தார். அப்போது துவங்கி, கும்மி பாடல்கள் மற்றும் ஒருங்கிணைப்புக்காக ஆசிரியர்களுக்கும், ஆடுவதற்காக பெண்களுக்கும் தொடர் பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது, 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 80,000க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். தினமும், இவர்கள் பயிற்சி எடுத்து, 3 வயது முதல், பெண் குழந்தைகள், பெண்கள் சேர்க்கப்பட்டு, ஒரே நிற ஆடை, அணிகலன்கள், சலங்கை, மரபுக்கு உட்பட்ட நிற தரை விரிப்பு, பேக்கிரவுண்ட்களுடன் இக்கலைக்கு புத்துயிர் வழங்கி உள்ளோம். இப்பயிற்சியில் தினமும் ஈடுபடும் பெண்கள், தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், மன ரீதியாக, உடல் ரீதியாக சிறு, சிறு உடல் நலக்குறைவுகள் கூட சரியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஒன்று போல ஆடுவது, மூளைக்கு சிறந்த பயிற்சி. குழந்தைகளுக்கு நினைவாற்றலை துாண்டுகிறது. மற்ற கலைகளை போல இல்லாமல், இக்கலையை பாரம்பரிய சொத்தாக பார்ப்பதால், வியாபார நோக்கில், பணத்துக்காக செயல்படுத்தவில்லை. அந்தந்த பகுதி ஏற்பாட்டாளர்கள், கலையை சிறப்பாக நிகழ்த்த உதவுகின்றனர். இவற்றுக்கான பாடல்கள், ஏற்கனவே உள்ளவற்றையும், புராண கதைகள், அந்தந்த பகுதி கோவில் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள், புதிதான கருத்துடன் பாடல்களை அமைத்து இசைத்து, ஆடுகின்றனர். இக்கலை அனைவருக்கும் பொது என்றாலும், நாங்கள் கலையை மீட்டெடுக்க முயல்கிறோம். சமீப காலங்களில், அ.தி.மு.க., – தி.மு.க., – பா.ஜ., நிகழ்ச்சிகளில் கூட, வள்ளி கும்மி ஆட்டத்தை நடத்தினர். இக்கலையை கோவில், வளாக நிகழ்வாக மட்டுமே நடத்துவர். திருமணம், வீதிகள், பொது இடங்களில் நிகழ்த்துவதில்லை. வரும் பிப்., 4ல் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடக்க உள்ள கொ.ம.தே.க., மாநாட்டில், ஒரே இடத்தில், 10,000 பேருக்கு மேல் வள்ளி கும்மியில் பங்கேற்க செய்து, கின்னஸ் சாதனையை நிகழ்த்த திட்டமிட்டு, பயிற்சி வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கொ.ம.தே.க., மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி கூறியதாவது: கொங்கு மண்டல பாரம்பரியம், பண்பாட்டை விளக்கும் இக்கலையில், பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்களில் படித்தவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் என ஈடுபடுவதால், தேவையில்லாமல், ‘டிவி’ மொபைல் போன்றவற்றில் நேரத்தை வீணடிப்பது குறைகிறது. பல பகுதியை சேர்ந்தவர்கள் சந்தித்து பழங்கும் வாய்ப்பாகிறது. இன்றைய கால கட்டத்தில் உறவுகளுக்குள் பழக்கவழக்கங்களே குறையும் நிலையை மாற்றி, அவர்களுக்கான தொடர்புக்கும் தளமாகிறது. இவ்வாறு கூறினார். –நமது சிறப்பு நிருபர்–