பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது; மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2023 04:10
நாகர்கோவில்; நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி இன்று காலை புறப்பட்டு சென்றது . முன்னதாக மன்னர் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் தமிழக, கேரளா, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பத்மநாபபுரம் தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பல்லக்குகளிலும் பவனியாக புறப்பட்டது. முன்னதாக பவனியில் எடுத்துச் செல்லப்படும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையின் உப்பிரிகை மாளிகையில் நடைபெற்றது. இதில்மத்திய அமைச்சர் முரளிதரன், கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன்,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., கலெக்டர் ஸ்ரீதர், குமரி மாவட்ட தேவசம்போர்டு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.இந்த வாள் பவனிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. பவனி 14-ல் திருவனந்தபுரம் சென்றடையும் .15-ல் நவராத்திரி பூஜை தொடங்குகிறது. நவராத்திரி பவனி நாளை காலை களியக்காவிளை வரும்போது கேரள கவர்னர் ஆரிப்முகமது கான் வரவேற்கிறார். அதைத் தொடர்ந்து கேரள போலீஸ் பாதுகாப்புடன் நவராத்திரி பவனி திருவனந்தபுரம் நோக்கி செல்லும்.