ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்து அன்னதானம் : முறைகேடு தடுக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2023 05:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு டோக்கன் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் முறைகேடு தடுக்க முடியுமா என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம், பழனி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல முக்கிய கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 31 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல கோயில்களில் முறைகேடு அதாவது சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் கூடுதலாக காட்டி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனை தடுக்க அக்.,7 முதல் ராமேஸ்வரம் கோயிலில் சாப்பிட வரிசையில் வரும் பக்தர்களுக்கு கணினி மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அனைத்து கோயிலிலும் அமல்படுத்தி உள்ளதால், முறைகேட்டை தடுக்க முடியும் என அரசு கருதுகிறது. ஆனால் இதிலும் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வி.எச்.பி., தலைவர் ஆ. சரவணன் கூறுகையில் : ராமேஸ்வரம் கோயிலில் இத்திட்டம் துவக்கிய நாள் முதல் அதிகாரிகள் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், தற்போது கணினி மூலம் டோக்கன் வழங்குவதால் முறைகேட்டை தடுக்க முடியுமா என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். தற்போது பக்தர்கள் கொண்டு வரும் கணினி டோக்கனை மட்டுமே மற்றொரு இடத்தில் கோயில் ஊழியர் ஸ்கேன் செய்வதால், இதிலும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. எனவே டோக்கன் வழங்குவதுடன் பக்தர்களின் விரல் ரேகையும் பதிவு செய்ய பயோமெட்ரிக் இயந்திரம் பொருத்தினால், முறைகேடு தடுக்க முடியும் என்றார்.