சென்னிமலை குறித்து ஜெபக்கூட்டத்தினர் மிரட்டல் பேச்சு: ஹிந்து அமைப்புகள் இன்று மாலை ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2023 10:10
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பினரின் மிரட்டல் பேச்சை கண்டித்து ஹிந்து அமைப்புகள் சார்பாக சென்னிமலையில் இன்று(அக்.,13) மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காட்டில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது. கடந்த செப். 17ம் தேதி ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று பேசியதால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும் கிறிஸ்தவ முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன் இன்று மாலை 4:00 மணிக்கு ஹிந்து முன்னணியினர் சென்னிமலை ஆண்டவர் குழு ஊர்மக்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னிமலையின் சிறப்புகள்; கொங்கு நாட்டு பகுதியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிவன் மலையும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இக்கோவில்களின் தெய்வீகத் தன்மைகளை முழுமையாக யாராலும் சொல்லி விடவோ விளக்கி விடவோ முடியாது. சென்னிமலையானது ஒவ்வொரு யுகங்கள் தோறும் மகுடகிரி புஷ்பகிரி கனககிரி சிரகிரி என்னும் பெயரைக் கொண்டது. இம்மலையை சுற்றி 24 தீர்த்தங்கள் உள்ளன.அவற்றுள் செங்கழுநீர் தீர்த்தம் குமார தீர்த்தம் இடும்பன் தீர்த்தம் யம தீர்த்தம்பட்சி தீர்த்தம் போன்றவை பிரசித்தி பெற்றவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தெற்கு பகுதியில் உள்ளது. இடும்பனுக்கு பழநி செல்வதற்கு வழிகாட்டிய தலம். ஆதலால் இம்மலையை ஆதிபழநி என அழைப்பர். இங்கு இடும்பனுக்கு சன்னிதி கிடையாது. லட்சோப லட்சம் பக்தர்களின் உள்ளங்களில் வீற்றிருந்து அவர்களின் இல்லங்களில் நிறைவான அருளாட்சி செய்யும் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை பாலன் தேவராய சுவாமிகள் அரங்கேற்றம் செய்த அருள் தலம். ஒரு ஜாதகருக்கு எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமாக இருந்தாலும் முருகப்பெருமான் சன்னிதிமுன் வந்து அவர் நின்றால் தோஷத்தை சுக்கு நுாறாக்கி தீவினைகளை பொடிபொடியாக்கி செவ்வாய் அனுக்கிரக்தை அவரே வழங்குவார். ஆதலால் இங்குள்ள நவக்கிரக சன்னதியில் செவ்வாய் இடம் பெறவில்லை.இப்படி பல்வேறு சிறப்பு பெற்ற தலம் தான் சென்னிமலை.