புரட்டாசி சுக்கிரவாரம்; அம்பிகை, முருகனை வழிபட சுகபோக வாழ்வு, வாகனயோகம் கிடைக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2023 10:10
வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, லட்சுமி, முருகன் ஆகியோருக்கு உரியது. இதனை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும். ஆடி, தை வெள்ளிகளில் மேற்கொள்வது இன்னும் சிறப்பு.
விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம். இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர். சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். பூமியின் மிக அருகில் சுக்கிரன் இருக்கிறது. இதன் ஆகர்ஷண சக்தி (இழுப்புத்திறன்) நம் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுக்கிரன் மனிதனை உலகியல் இன்பத்தில் ஆழ்த்தி விடும் தன்மை கொண்டது. இதில்இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவே வெள்ளிக்கிழமை வழிபாட்டை முன்னோர் உருவாக்கினர்.
புராண காலத்தில் பகீரதன் என்னும் மன்னன், கோரன் என்னும் அசுரனிடம் நாட்டை இழந்தான். அசுரகுருவான சுக்கிராச்சாரியாரிடம் சரணடைந்த பகீரதன் நாட்டை மீட்க வழி கேட்டான். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விரதமிருந்து, முருகனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும், என்றார் சுக்கிராச்சாரியார். அதன்படி விரதமிருந்த பகீரதன், கோரனுடன் போர் புரிந்து நாட்டைத் திரும்பப் பெற்றான். தேனூர் வரகவி சொக்கலிங்கனார் இயற்றிய சேய்த்தொண்டர் புராணத்தில் இந்த வரலாறு உள்ளது. இழந்த செல்வம் கிடைக்க மூன்று ஆண்டுகள் வெள்ளிக்கிழமை விரதமிருந்தால் முருகன் அருளால் வெற்றி கிடைக்கும்.