மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி; திருவாவடுதுறை ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2023 01:10
மயிலாடுதுறை; மாயூரநாதர் கோயிலில் இன்று நடந்த மண்டலாபிஷேக பூர்த்தி விழாவில், திருவாவடுதுறை ஆதின குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான தேவார பாடல் பெற்ற மாயூரநாதர் கோயில் உள்ளது. இத்தலத்தில் பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. சிறப்புமிக்க இக்கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த செப்.3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு யாகம் செய்யப்பட்டு, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலெக்டர் மகாபாரதி, ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனக் கண்காணிப்பாளர் சண்முகம், திருவிடைமருதூர் கோயில் நிர்வாகி ஸ்ரீராம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.