பதிவு செய்த நாள்
13
அக்
2023
03:10
மயிலாடுதுறை; வதான்யேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் வழிபாடு செய்தார்.
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்தி விழாவில் தருமபுரம் ஆதின குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோயில் என்றழைக்கப்படும் வதான்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலம் சிவபெருமான் ரிஷப தேவரின் கர்வத்தை அடக்கி தக்ஷிணாமூர்த்தியாக காட்சி தரும் தலம் ஆகும். குருபரிகாரத் தலமான இக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செப்.10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து,சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இன்ற மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு சுவாமி அம்பாள் மற்றும் மேத்தா தக்ஷிணாமூர்த்திக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயில் கட்டளை மடத்தில் தருமபுரம் ஆதீனம் கொலுக்காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், வர்த்தக சங்க நிர்வாகிகள் செந்தில்வேல், விஎச்பி. மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், ஆதீன திருமடத்தின் பொதுமேலாளர் ரங்கராஜன், மற்றும் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.