பதிவு செய்த நாள்
13
அக்
2023
05:10
நவராத்திரி வழிபாட்டில் சிறப்பிடம் பெறுவது கொலு. இதில் இடம் பெறும் பொம்மைகள் பார்க்க மட்டுமல்ல! நல்ல படிப்பினை பெறவும் தான்! இதை உணர்ந்தால் கோடி மடங்கு நன்மை ஏற்படும். ‘கொலு’ என்பதற்கு ‘அழகு’ என்பது பொருள். பலவித கோலங்களில் அம்பிகை அழகுடன் இருப்பதால் ‘கொலு’ என பெயர் வந்தது.
கொலு வைக்க நல்ல நேரம் காலை 7:31– 9:00 மணி
கலசத்தில் அம்பிகை: மரப்பலகையால் சிறு மண்டபம் அமைத்து அதன் நடுவில் உயரமான பலகையை ஆசனமாக வையுங்கள். அதன் மீது பட்டுப்புடவை விரித்து, மண் அல்லது உலோகத்தால் ஆன அம்மன் சிலை அல்லது அம்மன் படத்தை வைக்கலாம். வலது புறத்தில் கலசம் வைக்க வேண்டும். ஒன்பது நாட்கள் தினமும் மாலையில் அம்மனை அலங்கரிக்க வேண்டும்.
அடுக்கும் விதம் : முதல்படியில் புல், செடி, கொடி முதலிய தாவர பொம்மைகளும், இரண்டாம் படியில் சங்கு, சிப்பியாலான பொம்மைகளும், மூன்றாம் படியில் ஈ, எறும்பும், நான்காம் படியில் வண்டு, நண்டு பொம்மைகளும், ஐந்தாம்படியில் பறவை, மிருகங்களும், ஆறாம்படியில் வணிகர், குறவன், பாம்பாட்டி, போலீஸ் போன்ற பொம்மைகளையும் அடுக்க வேண்டும். ஏழாம் படியில் முனிவர், மகான் போன்ற உயர்நிலை மனிதர்களையும், எட்டாவது படியில் இந்திரன், குபேரன் போன்ற தேவர்கள், நவக்கிரகங்களை வைக்க வேண்டும். ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்ற தெய்வங்களை அடுக்க வேண்டும். பொம்மைகள் கிடைக்காவிட்டால், எல்லா படிகளிலும் தெய்வச்சிலைகளை அடுக்கலாம். தற்காலத்தில் படிகள் மட்டுமில்லாமல், தெப்பக்குளம், கோவில், தோட்டம், சந்தை, திருமண வைபவம், கடைத்தெரு போன்றவையும் இடம்பெறுகின்றன.
கொலு தத்துவம்: கொலு படிகளை ஒற்றைப்படையில் 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் வைப்பர். இந்த படிகளைப் போல மனிதனும் பல படிநிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. மேல்நோக்கிச் செல்லும் படியைப் போல, மனிதனும் வாழ்வில் உயர வேண்டும். ஓரறிவு உயிராக இருந்த நாம், பரிணாம வளர்ச்சியால் ஆறறிவு பெற்ற மனிதராகப் பிறந்திருக்கிறோம். இதை பயன்படுத்தி நற்பண்புடன் வாழ்ந்தால் அம்மன் அருளால் தெய்வ நிலையை அடையலாம் என்பதே கொலு உணர்த்தும் தத்துவம்.