பதிவு செய்த நாள்
14
அக்
2023
07:10
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ஆண்டு முழுதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.புரட்டாசி மாத அமாவாசை முன்னோர் பூமிக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இதில், பக்ஷம் என்பது 15 நாட்களை குறிக்கும். புரட்டாசி பவுர்ணமியில் துவங்கி, அமாவாசை உள்ள 15 நாட்களே
மகாளய பட்ச காலம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற ஆன்மிக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன.மகாளய கால நாட்களில் நம் முன்னோர், நமக்கு ஆசி வழங்குவதற்காகவே, பிதுர் லோகத்தில் இருந்து நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருவர் என்று கூறப்படுகிறது. மகாளய அமாவாசைமகாளய அமாவாசை அன்று தான், நம் முன்னோர்கள் வீடுதேடி வந்து ஆசிர்வதிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. அன்று பித்ருக்களுக்கு திதி கொடுப்பதை, பரம்பரை பரம்பரையாக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அத்தகைய சிறப்பு மிக்க மகாளய அமாவாசையில், தமிழகம் முழுதும் புண்ணிய நதிகள், சமுத்திரம் போன்ற இடங்களில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்து, தானம் செய்வது வழக்கம். அவ்வாறு திதி கொடுக்க தவறினால், முன்னோர் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, வாழ்க்கையில் முன்னேற்றம் போய்விடும் என்பதும் மக்கள் நம்பிக்கை.அத்தகைய சிறப்பு மிக்க மகாளய அமாவாசை இன்று தான்.