பதிவு செய்த நாள்
14
அக்
2023
10:10
சென்னை: சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தின் தென்கரையில், சோழர் காலத்தைச் சேர்ந்த ஜேஷ்டா தேவி என்ற மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், தாய் தெய்வ வழிபாடு மிகவும் பழமையானது. ஆறாம் நுாற்றாண்டு முதல், 11ம் நுாற்றாண்டு வரை கட்டப்பட்ட கோவில்களில் மூத்த தேவி சிற்பங்கள் இருந்தன. இந்த சிற்பங்கள், பல்லவர் காலம் முதல் சோழர் காலம் வரை கட்டப்பட்ட கோவில்களில் பரிவார தேவதைகளாக வைக்கப்பட்டன. பின், அந்த இடங்களில் நவகிரகங்களும், பைரவர் உள்ளிட்ட சிற்பங்களும் வைக்கப்பட்டன. மயிலாப்பூரில் கிடைத்துள்ள சிற்பம் 3 அடி உயரமுள்ளது. இந்த சிற்பத்தில், முகமும், வலது மார்பும் சிதைந்துள்ளது. பொதுவாக சிலையின் கால், கை பாகங்கள் சிதைந்தால், அதை மாற்றும் வழக்கமும், மற்ற பாகங்கள் சிதைந்தால், அதை, நீர் நிலைகளில் இடும் வழக்கமும் உள்ளது. அந்த வகையில் இது, வழிபாட்டில் இருந்து அகற்றப்பட்டிருக்கலாம்.
முக்கியத்துவம்: தற்போதுள்ள கபாலீஸ்வரர் கோவில், விஜய நகர மன்னர்களால், 16,- 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இதற்கு முன் பல்லவர், சோழர் காலத்தில் இருந்ததற்கான சான்றாக, திருஞான சம்பந்தர் பதிகமும், சாந்தோம் தேவாலய அருங்காட்சியகத்தில் உள்ள சோழர் கால துண்டு கல்வெட்டும் இருந்தன. தற்போது, இந்த கோவில் குளத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி சிற்பம் கிடைத்து உள்ளது, கோவிலின் பழமைக்கு மிக முக்கிய சான்றாக கருதப்படுகிறது.
கண்டுபிடித்தது எப்படி?; மயிலாப்பூர் பஸ் நிறுத்தத்தின் பின்பகுதியில், அரசமரத்தின் கீழ் இருந்த இந்த சிற்பத்தில், பட்டாடை சாத்தப்பட்டிருந்தது. அதை விலக்கிய போது, மூத்த தேவி என்பது தெரிந்தது. விசாரித்த போது, ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன், குளம் வறண்ட போது, இந்த சிற்பம் வெளிப்பட்டதாகவும், கரையில் போட்டதாகவும் கூறினர். அங்கு மலர்களை பறிப்பவர் தான், இந்த சிற்பத்துக்கு வெள்ளிக்கிழமை தோறும் மலர்கள் வைத்து, வழிபாடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.- அலெக்ஸ், கல்வெட்டு பயிற்சி மாணவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.