பதிவு செய்த நாள்
14
அக்
2023
10:10
உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
ஜெ. சங்கர், சென்னையில் இருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: கோவிலுக்கு வரும் சில பெண் பக்தர்கள், கடற்கரை அல்லது பூங்காவுக்கு வருவது போல், கிழிந்த, ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் குட்டை பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர்; இதனால், மற்ற பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். கோவில் பொழுதுபோக்கும் இடமல்ல, கடவுளின் இருப்பிடம். ஒடிசா மாநிலத்தின் புரி ஜெகன்னாதர் கோவில் நிர்வாக தலைவர் ரஞ்சன் குமார் தாஸ், கோவிலின் கண்ணியத்தையும், புனிதத்தையும் காப்பது எங்கள் பொறுப்பு. இதன்படி, 2024 ஜனவரி 1 முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது. எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என, அறிவித்துள்ளார்.
பஸ், ரயில், விமானம் மற்றும் கப்பல் போன்றவற்றில் கட்டணம் செலுத்திய பின்னரே பயணிப்பது போல, இறைவன் உறையும் இடத்திற்குள் நுழையவும், தரிசிக்கவும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது மிக அவசியம். கேரளாவில் உள்ள குருவாயூர், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் உட்பட அங்குள்ள அனைத்து கோவில்களிலும் நெடுங்காலமாக ஆடை கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சில ஆண்டுகளுக்கு முன், கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, கோவில் நுழைவாயில்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன; ஆனால், அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரகாரத்தில், ஏதாவது ஒரு இடத்தில் நோட்டமிட்டால், வெளிநாட்டு டூரிஸ்ட்கள் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் அரைகுறை ஆடைகளுடனும், உள்ளூர் பெண்கள் தலைவிரி கோலமாகவும், சர்வ சாதாரணமாக நடமாடுவதை காண முடியும். டூரிஸ்ட்களை அழைத்து வரும் கைடுகள், அவர்களிடம் ஆடை கட்டுப்பாடு குறித்து எடுத்துரைத்தால், நிச்சயம் அவர்கள் அதை கடைப்பிடிப்பர். ரோமில் இருந்தால், ரோமானியனாக இரு என்று, ஒரு பழமொழி உண்டு. அதுபோல, கோவிலுக்குள் நுழைந்தால், பக்தனாக, ஆடை கட்டுப்பாட்டுடன் செல்லுங்கள்; உங்கள் அழகை கடை விரித்து காட்டி, பிறர் மனதை சலனப்படுத்தாதீர்கள்.