பதிவு செய்த நாள்
14
அக்
2023
11:10
தஞ்சாவூர், திருவையாறில், புராட்டசி மகாளய அமாவாசையையொட்டி, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், காவிரி ஆற்றில் புனித நீராடியும் வழிபட்டனர்.
ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்று சிறப்பு பெற்றது. மகாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரை நீடிக்கிறது. இந்நாளில் நாம் கொடுக்கும் தர்ப்பணம், பெயர் தெரிந்த மற்றும் தெரியாத நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளும், தான தர்மங்களும் அவர்கள் மோட்சத்தை அடைய செய்யும். இவ்வாறான சிறப்புக்களால் தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் புரட்டாசி மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது ஓராண்டிற்கான திதி அளித்ததற்கு சமம் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான, முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கனிகள், கீரைகள் வைத்து முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு திருவையாறில் நுாற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அத்துடன், தஞ்சாவூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை ஓடத்துறை தெரு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாகவும், அரியலுார் மார்க்கமாக வரும் வாகனங்களை கீழ விதி வழியாகவும் மாற்றப்பட்டுள்ளது.