செஞ்சி: செஞ்சி பெரியகரம் முத்துமாரியம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். செஞ்சி பெரியகரம் முத்து மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி முதல் நடந்து வந்தது. இதை முன்னிட்டு கோவிலில் கொலு அமைத்து தினமும் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு 108 பெண்கள் காளியம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழுங்க பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நேற்று இரவு வாண வேடிக்கைகளுடன் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.