பதிவு செய்த நாள்
26
அக்
2023
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா பத்திரிகை, பப்ளிசிட்டிக்காக அடிக்கப்பட்டுள்ளதாக கூறி, பக்தர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதனால், பத்திரிகை வினியோகம் செய்யப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா வரும் நவ., 17ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவ., 26 மாலை, 6:00 மணிக்கு, 2,668 மலை உயர அண்ணாமலையார் உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படும். இதற்காக பக்தர்களுக்கு வினியோகிக்க ஆண்டுதோறும், நன்கொடையாளர்களால், 10,000 பத்திரிகை அச்சடித்து வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த பத்திரிகையை வாங்குபவர்கள், பூஜை அறையில் வைத்து பாதுகாப்பது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு பத்திரிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர்கள், வேலு, சேகர்பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலையில் என, புதியதாக வாசகம் சேர்க்கப்பட்டு, அச்சடிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் பப்ளிசிட்டிக்காக அச்சடித்த பத்திரிகையை, பூஜை அறையில் வைக்க முடியாததால், பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், பக்தர்களுக்கு பத்திரிகை வினியோகம் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.