உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா துவங்கியது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் துவங்கியது. இவ்விழா வரும் 23ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. ஆசிரமத்தின் தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா, ரகுவம்சத்தின் பெருமையை விளக்கும் கொலு கண்காட்சியை திறந்து வைத்தார்.தலைமை மாதாஜி சிறப்புரையாற்றுகையில், ரகுவம்சத்தில் வந்த மகாராஜர்களின் பெருமைகள், அவர்களின் மகத்தான தியாகம், தேச மக்கள் மீது கொண்டுள்ள பேரன்பு, தயாள குணங்களை பற்றி எடுத்துரைத்தார்.மேலும், பகவான் ஸ்ரீராமசந்திரமூர்த்தியின் முன்னோர்களின் புனித சரிதத்தை விளக்கும் ரகுவம்சத்தை பற்றி யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்களும், அவர்களின் சந்ததியினரின் வாழ்க்கையும் தழைத்து விளங்கும் என ஆசியுரை வழங்கினார். ஆசிரமத்தின் மேலாளர் யத்தீஸ்வரி அனந்தபிரேம ப்ரியா அம்பார் முக்கிய உரையாற்றினார். துவக்க விழாவில் அன்னை ஆதிபராசக்தி சுவாமி, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.