பதிவு செய்த நாள்
17
அக்
2012
11:10
திருச்செங்கோடு: கேதாரகவுரி விரதத்தை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. ஆண் பாதி, பெண்பாதி என்கிற தத்துவம், சிவனின் திருவிளையாடல்களில் ஒன்றாக கருதப்படும். சிவனில் பாதியாக இடம் பெற வேண்டி, சக்தி தேவி, கேதார கவுரி விரதம் இருந்தாகவும், விரதம் முடிந்து மகாளய அமாவாசை அன்று, தன்னில் சரிபாதியை தந்த பரமன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்ததாகவும், வரலாறு கூறுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த கேதார கவுரி விரதத்தை, பக்தர்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். மேலும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்கள் கேதார கவுரி விரதம் இருந்தால், திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.கேதார கவுரி விரதம் இருந்த பக்தர்கள் மகாளய அமாவாசையான நேற்று, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் மலைக்கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.