பதிவு செய்த நாள்
17
அக்
2012
11:10
மண்ணச்சநல்லூர்: உத்தமர்கோவிலில் நடந்த லட்சார்ச்சணையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்பு பெற்றது உத்தமர் கோவில். திருக்கரம்பனூர், ஆதிமாபுரம், பிச்சாண்டார்கோவில் என வழங்கப்படும். இக்கோயில் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியர்களுடன் எழுந்தருளியுள்ள தனிச்சிறப்பும் பெற்றது ஆகும். உத்தமர் கோவிலில் நடக்கும் லட்சார்ச்சணையில் பங்கேற்று, நம்பெருமாளை வழிபட்டால் உடல்நலம், கடன் தீர்தல், நோய் நீக்கம், தோற்றப்பொழிவு, மனத்தூய்மை, பயம் நீக்குதல், ஆயுள் நீட்சி, நன்மக்கட்பேறு உள்ளிட்ட நற்பேறுகளை அடையலாம் என்பது நம்பிக்கை.அதன்படி உத்தமர் கோவிலில் நேற்று ஏகதின லட்சார்ச்சணை நடந்தது. நேற்று காலை, ஒன்பது மணிக்கு துவங்கிய லட்சார்ச்சணை இரவு, 7.30 மணி வரை நடந்தது. விழாவில் முன்னாள் கோவில் அறங்காவலர் முத்துகிருஷ்ணன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் மற்றும் உதவி கமிஷனர் தங்கமுத்து ஆலோசனைப்படி, செயல் அலுவலர் சந்திரசேகரன், கணக்கர் சாய்வெங்கடசுப்ரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.