பதிவு செய்த நாள்
18
அக்
2012
10:10
சபரிமலை: சபரிமலை, அய்யப்பன் கோவில் புதிய தலைமை அர்ச்சகராக, என்.தாமோதரன் போற்றி, குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐப்பசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், நடை திறந்ததும், அக் கோவிலுக்கும், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கும் புதிய தலைமை அர்ச்சகர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதேபோல், அடுத்த ஓராண்டுக்கான, புதிய தலைமை அர்ச்சகர் தேர்வு, நேற்று மதியம் நடந்தது. இதற்காக விண்ணப்பித்தவர்களில், அய்யப்பன் கோவிலுக்கு ஒன்பது பேரும், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கு 10 பேரும் தகுதி பெற்றனர். அவர்களில், ஒருவரை, குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி, நேற்று மதியம் அய்யப்பன் கோவிலில் நடந்தது. இதில், அய்யப்பன் கோவிலுக்கு, வைக்கம் பகுதியைச் சேர்ந்த, என்.தாமோதரன் போற்றியும், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கு, கூத்தாட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.என்.உன்னி கிருஷ்ணன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைமை அர்ச்சகர்கள் கார்த்திகை மாதம், 1ம் தேதி மண்டல பூஜை துவங்கும்போது, பொறுப்பேற்பர்.