பதிவு செய்த நாள்
18
அக்
2012
10:10
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் சுற்றுச்சுவர் இடியும் நிலையில் இருப்பதால், அதனை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் பெரிய மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாங்கல்யம் காக்கும் மாரியம்மன் என்ற சிறப்பு பெயரும், இம்மாரியம்மனுக்கு உண்டு. பங்குனி மாதத்திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பர். மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, பல்வேறு அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலின், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, இடியும் நிலையில் உள்ளது.சி.எஸ்.ஐ., மைதானத்தில் வளர்க்கப்படும் ஆலமரத்தால் இடியும் நிலைக்கு தள்ளப்பட்ட சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: ஈரோடு சி.எஸ்.ஐ.,பள்ளி மைதானத்தில் வளர்க்கப்படும், ராட்சத ஆலமரத்தின் வேர், பெரியமாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரிலும் வளர்ந்ததால், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடியும் நிலையில் உள்ளது. சி.எஸ்.ஐ., பள்ளியையொட்டி, சுற்றுச்சுவர் உள்ளதால், இடிந்த சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.பெரிய மாரியம்மன் கோவிலில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்போதே, இடியும் நிலையில் உள்ள மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.அதிகாரி கூறுகையில், ""பெரிய மாரியம்மன் கோவிலில், விழும் நிலையில் உள்ள சுவரை சீரமைக்க, உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சீரமைப்பதில் உள்ள சிக்கல் குறித்தும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், சுற்றுச்சுவர் சீரமைக்கப்படும், என்றார்.