காவிரி அன்னைக்கு மகாஆரத்தி; நதியில் விளக்கேற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2023 05:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி தீர்த்தப் படித்துறையில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி நதிநீர் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 13-வது ஆண்டாக ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 20-ம் தேதி கர்நாடக மாநிலம், தலைக்காவிரியில் தொடங்கிய இந்த யாத்திரை காவிரி நதி செல்லும் பாதை வழியாகச் சென்று நவம்பர் 14ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரிநீர் கடலில் கடக்கும் பகுதியான பூம்புகாரில் நிறைவடைகிறது. காவிரியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிவராமபுரம் பகுதிக்கு வருகைதந்த ராமானந்த சுவாமிகள் தலைமையில் 20 சன்னியாசிகள் அடங்கிய ரத யாத்திரை குழுவினரை சிவபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் டிரஸ்டி ஸ்ரீலஸ்ரீ வீரராகவ ஜீயர் சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் வரவேற்றனர். பின்னர் குத்தாலம் காவிரி தீர்த்தப்படித்துறையில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகாஆரத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் காவிரி நதியில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொண்டனர்.