பதிவு செய்த நாள்
15
நவ
2023
12:11
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா இரண்டாம் நாளான நேற்று, சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்து அருள்பாலித்தார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் அதைத்தொடர்ந்து காலபூஜைகள் நடந்தன. பின், ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி – தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல் பாட சண்முகவிலாசம் மண்டபத்துக்கு வந்தடைந்தார். மாலை , திருவாவடுதுறை ஆதீன சஷ்டிமண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கந்த சஷ்டி மூன்றாம் நாளான இன்று அதிகாலை 3: 00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் காலபூஜைகள் நடைபெற்றது. வரும்18ம் தேதி மாலை 4:00 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.