பதிவு செய்த நாள்
15
நவ
2023
02:11
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி மந்தக்கரை மகா கணபதி கோவிலில் தேரோட்டம் விமர்சையாக நடந்தது.
திருவிழாவின் முதல் நாளில், அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில், விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, கணபதி, சுப்பிரமணியர் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தனர். இரண்டாம் திருநாளான இன்று மந்தக்கரை மகா கணபதி கோவில் தேரோட்டம் காலை 11.15 மணியளவில் நடந்தது. முன்னதாக காலை 8:30 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், 11 மணிக்கு மூலவருக்கு களபாபிஷேகம் ஆகியவை நடந்தன. மகா கணபதிக்கு ஜெய், மந்தக்கரை கணபதி ஜெய் என்று கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து உற்சவர் அலங்கரித்த குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடந்தன. நாளை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில்களில் தேரோட்டம் நடக்கிறது. மாலை 6.00 மணி அளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலின் அருகே, ரதோற்சவத்தின் சிறப்பு அம்சமான, ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது. இதையடுத்து, இன்று, கல்பாத்தி அக்ரஹார வீதி உட்பட சுற்றுவட்டாரங்களில், போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு பாலக்காடு எ.எஸ்.பி., ஷாகுல் ஹமீதின் தலைமையிலான 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேமரா மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.