மயிலாடுதுறையில் துலா உற்சவ தேரோட்டம்; கொட்டும் மழையில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2023 03:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் சுவாமி கோயிலில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கடந்த மாதம் 18ம் தேதி ஐப்பசி முதல் நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய விழாவாக கடந்த 7ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவம் தொடங்கியது. அதில் முக்கிய நிகழ்வாக 13ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், இரவு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து திருத்தேர்ரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்ததை அடுத்து விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், அபயாம்பிகை சமேத மாயூரநாதர் ஆகிய சுவாமிகள் மூன்று தனித்தனி தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு குருமகா சன்னிதானம் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் சிவ ஆகம வேத பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், தொழிலதிபர் விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன், நகராட்சி தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் சதீஷ்குமார், உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர் தெற்கு வீதிக்கு சென்றபோது மீண்டும் பலத்த மழை தொடங்கினாலும் பக்தர்கள் பரவசத்துடன் கொட்டும் மழையில் நனைந்தபடி வடம்பிடித்து இழுக்க, நான்கு வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது.