பதிவு செய்த நாள்
15
நவ
2023
05:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் காலை யாகசாலை பூஜை நடக்கிறது.
சஷ்டியை முன்னிட்டு நவ.,13 முதல் விசாக கொறடு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்ககுடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனித தீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கிறது. நவ.,19 காலையில் சண்முகருக்கு தங்க குடத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 17ல் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், நவ 18 மாலை 6:00 மணிக்கு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார லீலையும், நவ 19 காலை சட்டத் தேரில் தங்கமயில் வாகனத்தில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரதவீதிகளில் தேரோட்டமும் நடக்கிறது. தேரோட்டம் முடிந்த பின்பு கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், மாவிளக்கு வைத்து சஷ்டி விரதத்தை முடிப்பர். மாலை 4:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை தரிசனம் நடக்கும்.