பதிவு செய்த நாள்
16
நவ
2023
10:11
மயிலாடுதுறை; ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடைமுக தீர்த்தவாரியில் பங்கேற்று காவிரியில் நீராடி மயூரநாதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர், வதான்யேஸ்வரர், ஐயாரப்பர், புனுகீஸ்வரர், காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் ஐப்பசி மாதம் கடைசி பத்து நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி திருத்தேர் உற்சவம் திருக்கல்யாணம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நிறைவுற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி இன்று ஆற்றின் இரு கரைகளிலும் அனைத்து கோயில்களிலும் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதற்காக இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராட வருகை தந்துள்ளனர். மதியம் ஒன்றரை மணிக்கு 20ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் நீராடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா தலைமையில் மூன்று டிஎஸ்பிகள் ஆறு இன்ஸ்பெக்டர்கள், 13 சப்இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் போலீசார் 86 பேர், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுமத்தைச் சேர்ந்த 20 காவல் துறையினர், தஞ்சை மற்றும் திருவாரூரிலிருந்து அறுபது அதிரடி படையினர் உள்ளிட்ட 250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படையினர் ரப்பர் படகுகளில் ஆழமான பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே காவிரியின் இரு கரைகளிலும் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். தடுப்புகள் அமைத்து தனித்தனியே குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இருபுறமும் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நடந்து செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனித நீராடும் பக்தர்கள் அருகில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து திரும்பி செல்கின்றனர். இன்று துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.