பதிவு செய்த நாள்
21
நவ
2023
03:11
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், காட்டு சிவா சித்தர்கள் வழி வந்த சீடர்களின், 13 சமாதிகள் இடிக்கப்பட்டதால், அவரது வழி வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஆணாய் பிறந்தான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, அண்ணாமலையார் மலை வனப்பகுதியையொட்டிய குளம் அருகே கடந்த, 1957 ம் ஆண்டுகளில், காட்டு சிவா என்பவர் தவமிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
இவர், தவமிருந்த இடத்தின் அருகில், 6.81 ஏக்கர் நிலத்தை அவரது பக்தர், அவருக்கு தானமாக வழங்கினார். அவரது மறைவிற்கு பின் அந்த இடத்தை, அவரது வழிவந்த அவரது சீடர்கள் பராமரித்து, அங்கு வழிபாடு நடத்தி வருகின்றனர். இவ்வாறு அங்கு, 1975 முதல், 2019ம் ஆண்டு வரை அவரது, 13 சீடர்களின் சமாதி, அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அவரது சீடர்கள், காட்டு சிவா சித்த அப்பியாச ஆலயம் என்ற பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி, மாதந்தோறும் காட்டு சிவா சித்தரின் ஜென்ம நட்சத்திர தினமான கிருத்திகையன்று சிறப்பு பூஜை, அன்னதானம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இடம், வாரிசுதாரர்கள் யாரும் இல்லாத இடம் எனக்கூறி வருவாய் துறையினர் கையகப்படுத்தி, அரசு நிலமாக மாற்றியுள்ளனர். மேலும், அந்த இடத்திலிருந்த, 13 சமாதிகள் மற்றும் கிணறு ஆகியவற்றை கடந்த, 2 நாட்களுக்கு முன் இடித்து தரைமட்டமாக்கினர். தற்போது அந்த இடத்தில் பவுர்ணமி மற்றும் தீப திருவிழா நாட்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால், காட்டு சிவா வழிவந்த சித்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்த ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் அருண் தலைமையில், ஹிந்து முன்னணி அமைப்பினர் மற்றும் காட்டு சிவா வழி சீடர்கள் ஆகியோர், இடிக்கப்பட்ட சமாதியை சீரமைத்து, மூடப்பட்ட கிணற்றையும் துார்வாரி சரிசெய்து தரக்கோரி, நேற்று, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷிடம் மனு அளித்தனர். அவர், இது குறித்து பரிசீலிப்பதாக அவர்களிடம் கூறி, அனுப்பி வைத்துள்ளார்.