பதிவு செய்த நாள்
19
அக்
2012
10:10
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தாயார் திருவடி சேவை வரும், 21ம் தேதி நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், தாயார் சன்னதியில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெகு விமரிசையுடன் நடக்கும். ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில், தாயார் புறப்பாடாகி கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த, 15ம் தேதி துவங்கி, கோலாகலமாக நடந்து வருகின்றது. தாயார் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, இரவு, 7.30 மணிக்கு கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். பிறகு இரவு, 9.45க்கு கொலு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, இரவு, 10 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருவடி சேவை வரும், 21ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் ஸ்ரீதாயார் கொலு மண்டபத்தில் பாதங்கள் தெரிய எழுந்தருளி இருப்பார். மேற்கண்ட திருவடியை பக்தர்கள் சேவித்தால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். செல்வ வளம்பெருகும் என்பது ஐதீகம். இதனால் தாயார் திருவடிசேவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். இதைத்தொடர்ந்து வரும். 24ம் தேதி விஜயதசமியன்று ரெங்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு, சிங்கப்பெருமாள் கோவிலை அடைகிறார். அங்கு வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.