திருவண்ணாமலையில் கொட்டும் மழையில் கிரிவலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2023 12:12
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், 5 மணி நேரம் மழையில் நனைந்து, காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், மழையில் நனைந்தபடி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வார விடுமுறை நாட்களில் வழக்கமாக பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த, 26ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. வரும், 6ம் தேதி வரை தொடர்ந்து எரியும் என்பதால், மஹா தீபத்தை காண, விடுமுறை நாளான நேற்று, மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய, 5 மணி நேரம் கொட்டும் மழையில் காத்திருந்தனர். தரிசனம் செய்த பிறகு, 14 கி.மீ., துாரம் கிரிவலத்தை தொடங்கினர். அப்போதும் மழை பெய்தது. ஆனாலும், பக்தர்கள் அதை பொருட்படுத்தாமல் சென்றனர்.