பதிவு செய்த நாள்
19
அக்
2012
10:10
திற்பரப்பு: காளிமலை துர்க்காஷ்டமி விழாவிற்கு இருமுடிகட்டுடன் செல்லும் பக்தர்களின் பாதயாத்திரை இன்று(19ம் தேதி) கன்னியாகுமரியில் இருந்து துவங்குகிறது. காளிமலை துர்க்காஷ்டமி விழாவிற்கு பக்தர்கள் இருமுடிகட்டுடன் செல்வது வழக்கம். ஆண்டு தோறும் இருமுடிகட்டுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் சன்னதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். இந்த ஆண்டு இன்று(19ம் தேதி) காலை 8 மணிக்கு காளிமலை டிரஸ்ட் தலைவர் குமார் தலைமையில் பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக நிர்வாகி பவீதரன் துவக்கி வைக்கிறார். குமாரகோவில் ஸ்ரீராம்ஜி ஆஸ்ரம மாதாஜி ஓம்பிரகாஷ் யோகினி, காளிமலை டிரஸ்ட் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் செல்லன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இருமுடிகட்டுடன் ஊர்வலமாக வரும் பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், வடசேரி வழியாக தோட்டியோடு மவுனகுருசுவாமி மடத்தில் இன்று இரவு தங்குகின்றனர். நாளை(20ம் தேதி) அங்கிருந்து புறப்பட்டு குமாரகோவில் ஜங்ஷன், தக்கலை, சுவாமியார்மடம், மார்த்தாண்டம், உண்ணாமலைக்கடை வழியாக ஆற்றூர் ஈயாங்குளம் இசக்கியம்மன் கோயிலில் இரவு தங்குகின்றனர். வரும் 21ம் தேதி சிதறால், அம்பலக்கடை, அருமனை, களியல் வழியாக இரவு பத்துகாணி சிவன் கோயிலை வந்தடைகிறது. 22ம் தேதி காலை காளிமலை சன்னதியில் ஊர்வலமாக வரும் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து துர்க்காஷ்டமி விழாவை முன்னிட்டு நெய், தேன் அபிஷேகம், மாலை சிறப்பு தீபாராதனை நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை நவமி பூஜை, சிறப்பு பூஜை, 24ம் தேதி காலை 8 மணிக்கு வித்யாரம்பம், தசமி பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.