பதிவு செய்த நாள்
20
அக்
2012
10:10
தஞ்சாவூர்: சோழ மன்னன் ராஜராஜனின், 1,027வது சதய விழா வரும், 24, 25ம் தேதிகளில் நடக்கிறது. இதையடுத்து, 24ம் தேதி விஜயதசமி வரும் நிலையில், 25ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுவது குறித்துகலெக்டர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவிலின் கட்டிடக்கலை நுட்பத்தை இப்போதும் வெளிநாட்டினர், பிற மாநிலத்தினர் கண்டு, வியந்து செல்கின்றனர். ராஜராஜனின், 1027வது சதய விழா வரும் 24, 25ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகமும், இந்துசமய அறநிலையத்துறையும் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகிறது. சதய விழா மரபு மாறாமல், நடப்பாண்டு சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 24, 25ம் தேதிகளில் கலைநிகழ்ச்சிகள், நாட்டியம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. சதய விழா தினங்களிலிருந்து வெளிமாநில, மாவட்டங்களிலிருந்து கலை ஆர்வலர்கள், பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பும், போதிய கழிவறைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதம் தவிர்க்க தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் தயார்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார பணிகளும் நகராட்சி மூலம் முடுக்கிவிடப்படவுள்ளது.
பாதுகாப்பு காரணத்துக்காக, தேவையான இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தவும் போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சதயவிழாவை சிறப்பிக்கும் நடவடிக்கைகள் குறித்து, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் தலைமையில், சதய விழாக்குழு தலைவர் தங்கமுத்து, டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். சதய விழாவையொட்டி, 24ம் தேதி விஜயதசமி வரும் நிலையில், நிறைவு தினமான, 25ம் தேதி, அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை விடுவது குறித்தும் கலெக்டர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து கல்வித்துறை மூலம் முன்கூட்டியே பள்ளிகளுக்கு அறிவிப்பு செய்யப்படாதால், எப்போது விடுமுறை? என்பதில் ஆசிரியர், மாணவர், பெற்றோர் இடையே குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதி கூறுகையில், ""தஞ்சையில் சதய விழாவையொட்டி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை எப்போது? என்பது குறித்து கலெக்டரிடம் ஆலோசித்துவிட்டு, பின்னர் அறிவிக்கப்படும், என்றார். இந்நிலையில், சதய விழாவுக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில், முன்கூட்டியே உள்ளூர் விடுமுறையை அறிவித்து, கல்வித்துறை உறுதிப்படுத்தினால், வரும் வாரத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, பக்ரீத் பண்டிகை விடுமுறை வருவதால், அதற்கேற்ப திட்டமிட பெற்றோர்கள், மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.