பதிவு செய்த நாள்
10
பிப்
2024
04:02
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை காண 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். வாகனங்களை நிறுத்த இடமின்றி 5 கி.மீ., துாரத்தில் நிறுத்தியதால் நள்ளிரவில் பக்தர்கள் கும்மிருட்டில் நடந்து வந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தங்க கவச அலங்காரம் செய்திருந்தனர். இரவு 11 மணிக்கு மேளதாளம் மற்றும் சிவவாத்தியங்கள் முழுங்க அங்காளம்மன் ராஜாராஜேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் தலைமையில், பூசாரிகள் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடத்தினர். அப்போது பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாளாட்டு பாடல்களை பாடினர். ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். விழுப்புரம் கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சுவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, வேலுார், புதுச்சேரி, கடலுார், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்ப பஸ்களை இயக்கினர். தை அமாவாசை என்பதாலும் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லுாரிகள், வங்கி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதாலும் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். இரவு 10 மணிக்கு பிறகு வாகனங்களை நிறுத்த மேல்மலையனுாரில் இடம் இல்லாததால் சிறுதலைப்பூண்டி. கொடுக்கண்குப்பம் ஆகிய கிராமங்களில் 2 முதல் 5 கி.மீ., துாரம் முன்னதாக வாகனங்களை நிறுத்தினர். அங்கிருந்து கும்மிருட்டில் பக்தர்கள் செல்போன் லைட் உதவியுடன் குழந்தைகளுடன் நடந்து வந்தனர்.