பதிவு செய்த நாள்
23
பிப்
2024
03:02
சூலூர்; சூலூர் வற்றியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்ரீ வற்றியம்மன் கோவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கடந்த, 19 ம்தேதி முகூர்த்த கால் வைத்தலுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 20 ம்தேதி மாலை, 5:00 மணிக்கு, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, புண்யாகவாஜனம், கும்பஸ்தாபனம், யாக சாலை பிரவேசம் நடந்தது. 108 திரவியங்களை கொண்டு முதல் கால ஹோமம் நடந்தது. 21ம்தேதி இரண்டு கால ஹோமங்கள், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. இரவு அனைத்து தெய்வங்களுக்கும் அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது. தொடர்ந்து வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு நான்காம் கால ஹோமம், நாடி சந்தானம், திருமுறை பாராயணம் நடந்தது. பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 9:00 மணிக்கு, விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து ஸ்ரீ வற்றியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மகா அபிஷேகம், தச தான, தரிசன பூஜைக்கு பின்,மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.