பதிவு செய்த நாள்
24
பிப்
2024
10:02
அயோத்தி ராமர் கோவிலில் ஒரு மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர், என, பா.ஜ., சுற்றுச் சூழல் அணி மாநில தலைவர் கோபிநாத் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் நடந்தது. அதற்கு முன்பே, தமிழகத்தை சேர்ந்த, 25,000 பக்தர்கள், அக்கோவிலில் தரிசனம் செய்தனர். இதனால் தமிழக பக்தர்களுக்கு உதவ, பா.ஜ., சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் கோபிநாத் உட்பட, 5 பேர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த 8ம் தேதி முதல், அயோத்தியில் முகாமிட்டு, தமிழக பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.இதுகுறித்து கோபிநாத் கூறியதாவது:கடந்த, 8 முதல் நேற்று முன்தினம் வரை தமிழகத்தின் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய நகரங்கள் வழியே, 16 சிறப்பு ரயில்களில் ஒரு ரயிலுக்கு, 1,350 பேர் வீதம், 21,600 பேர் அயோத்தி வந்து தரிசனம் செய்துள்ளனர். அத்துடன் வரும், 29 வரை மேலும், 18 சிறப்பு ரயில்களில் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் வர உள்ளனர். அதுமட்டுமின்றி வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் வாரணாசி, பாட்னா, லக்னோ வழியாகவும், தமிழக பக்தர்கள் அயோத்தி வந்து தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து காசியில் தரிசனம் செய்து, ஊர் திரும்புகின்றனர். ரயில்கள் மட்டுமின்றி விமானம் மூலமும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா நிறுவனங்கள், ஏஜன்சி, ஏஜன்ட் மூலமும் பஸ்கள், வேன்கள், கார்களிலும் அயோத்திக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஜன., 22ல் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், பிப்., 22 வரை, தமிழகத்தில் இருந்து மட்டும், 1.50 லட்சம் பக்தர்கள், அயோத்தி ராமரை தரிசனம் செய்துள்ளனர். அயோத்தி வரும் பக்தர்களுக்கு, மார்ச், 6 வரை பா.ஜ., குழுவினர் முகாமிட்டு தேவையான உதவிகளை செய்து கொடுக்க உள்ளோம். அதனால் அயோத்தி வரும் பக்தர்கள் அந்தந்த மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள் மூலம் எங்களை தொடர்பு கொண்டு, வருகையை உறுதிப்படுத்தி தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -