நத்தம் மாரியம்மன் பூக்குழி கண் திறப்பு நிகழ்ச்சியில் வட்ட மிட்ட கருடன்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2024 12:02
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சியின் போது கருடன் வானத்தில் வட்டமிட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முன்னதாக பிப்.12 கொடியேற்றத்துடன் 15 நாள் திருவிழா தொடங்கியது. இதில் தீர்த்தம் எடுத்தல், காப்பு கட்டுதல், மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டில் என தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பூக்குழி இறங்கும் இடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு, கண் திறக்கப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோசமிட்டனர்.அதனைத் தொடர்ந்து மாலை மாரியம்மன் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் நகர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் பிப்.27ஆம் தேதி நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.