பதிவு செய்த நாள்
24
பிப்
2024
01:02
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பக் குளக்கரையில் ஏராளமான பெண்கள் தீபமேற்றினர். இக்கோயிலில் கடந்த, 15 ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை, வெண்ணெய் தாழிக்கிருஷ்ணன் திருக்கோலத்தில், பெருமாள் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து, பகல், 11:56 மணிக்குள் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெற்றது.இன்று காலை 10:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள், தங்கப்பல்லக்கில் திருவீதி வலம் வந்து, தெப்ப மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 12:50 முதல் 1:20 மணிக்குள், தெப்பம் நடைபெற்றது. மீண்டும் இரவு 10 மணிக்கு பெருமாள் தெப்பம் எழுந்தருளி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தை மும்முறை வலம் வந்து எழுந்தருளல் நடைபெறும்.
நேர்த்திக்கடன் விளக்கு சமர்ப்பித்தல்: தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பெண்கள் குளக்கரையில் தீபமேற்றி வழிபடுவது மாசித் தெப்ப உற்சவத்தில் சிறப்பானதாகும். பெண்கள் தெப்பக்குளக்கரை மற்றும் சுற்றிலும் எண்ணெய் விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக நடந்த தெப்பத் திருவிழாக்களின் போது, தங்கள் வேண்டுதல் கோரிக்கைக்காக, பிறர் ஏற்றி, அணைந்த விளக்குகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, விளக்கை பெருமாளாக நினைத்து தினசரி வழிபடுகின்றனர். பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின், நிறைவேற்றியதற்கு பெருமாளுக்கு நன்றி தெரிவித்து, விளக்கை சமர்ப்பிக்கவே குளக்கரையில் தீபமேற்றுகின்றனர்.