சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி ஆண்டியபட்டி முனியப்பன் கோயில் திருவிழாவில் பாரி வேட்டை எனும் பாரம்பரிய விழா நடந்தது. விழாவையொட்டி முன்னதாக ஏப்.9 இரவு கருப்பணசாமிக்கு பழம் வைத்து அபிஷேக ஆராதனை நடந்தது. மறுநாள் ஞான விநாயகர் கோவிலுக்கு பொங்கல் வைத்தல், தோரணம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று தீச்சட்டி எடுத்தல், முனியப்பனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நடந்தது. அதனைத் தொடர்ந்து பாரிவேட்டை எனும் பாரம்பரிய புலி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராம இளைஞர்கள் மேல் சட்டை அணியாமல், உடல் முழுவதும் சந்தனம் பூசி, அருவாள், வேல் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் புலியை வேட்டையாடுவது போல் பாவனை செய்து பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.