பதிவு செய்த நாள்
24
ஏப்
2024
05:04
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றது. இங்கு, சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 17ம் தேதி துவங்கியது.
அலங்கார சுவாமி, தினசரி காலை, இரவு உற்சவ சேவையாற்றி, வீதியுலா செல்கிறார். ஐந்தாம் நாள் முக்கிய உற்சவமாக, கடந்த 21ம் தேதி, சுவாமி கருட வாகனத்தில் சேவையாற்றி, வீதியுலா சென்றார். ஏழாம் நாள் உற்சவமாக, நேற்று திருத்தேரில் கோலாகலமாக உலா சென்றார். நேற்று காலை கோவிலில் நித்ய பூஜை நடந்தது. ரத பிரதிஷ்டை ஹோமம் நடத்தி, தேவியருடன் சுவாமி, அலங்கார திருத்தேரில் எழுந்தருளினார். அவருக்கு பூதத்தாழ்வார் மாப்பிள்ளை மரியாதை செலுத்தி அளித்த ஆடையை சாற்றி வழிபட்டனர். மங்கல வாத்தியங்கள் இசைத்து, நாலாயிர திவ்ய பிரபந்தம், வேதபாராயணம் முழங்கி, காலை 8:20 மணிக்கு, நிலையிலிருந்து திருத்தேர் புறப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, வடம்பிடித்து இழுத்து, ராஜவீதிகளில் சுவாமி உலா சென்றார். 10:45 மணிக்கு உலா முடிந்து, தேர் நிலையை அடைந்து, சுவாமி கோவிலை அடைந்தார். மாலை, பூதத்தாழ்வார் அவதார வளாகத்தில், வசந்த திருமஞ்சனம் நடந்தது. திருத்தேர் உற்சவத்தில், பூதத்தாழ்வார் அவதார வளாகத்தில், கடந்த 1979 வரை, வசந்த உற்சவ திருமஞ்சனம் நடத்தப்பட்டது. நாளடைவில் வளாகம் பராமரிப்பின்றி சீரழிந்து, உற்சவமும் கைவிடப்பட்டது. 45 ஆண்டுகள் கடந்து, தற்போது மீண்டும் உற்சவம் துவக்கப்பட்டது. ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில் திருத்தேர் உற்சவம் நடத்தப்பட்டது.