பதிவு செய்த நாள்
24
ஏப்
2024
05:04
சென்னை; சித்ரா பவுர்ணமி தினமான நேற்று, சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில், பால் குடம் எடுத்தல், திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை, சித்திரைக் கஞ்சி வார்ப்பு ஆகியவை நடந்தன.
சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடு, வீதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில், 1,008 பக்தர்கள் பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஹிந்து மத நம்பிக்கைபடி, ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களை கணிப்பவர், சித்திர புத்திரனார். நேற்று அவரின் அவதார திருநாள் என்பதால், பல கோவில்களில், சித்திரகுப்த பூஜை நடத்தப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கபாலீஸ்வரருக்கு மரிக்கொழுந்து சார்த்தும் நிகழ்வு நடந்தது. மேலும், கோலவிழி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள், நேற்று மாலை தங்கள் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுடன் சென்னை, மெரினா, எலியாட்ஸ் கடற்கரையில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர். l தண்டையார்பேட்டை, அருட்கோட்டம் முருகன் கோவிலில் 57ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, வெகு விமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, செல்லா காவடி, பறவைக் காவடி மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி கரும்பால் தொட்டில் கட்டி காவடி எடுத்து 5 கி.மீ., ஊர்வலமாக வந்தனர். திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான, பொதுமக்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், வனத்துறை குடியிருப்பில் ஸ்ரீ பவானி அம்மன் உடனுறை ஸ்ரீ பவானி சங்கர் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா, நேற்று காலை வெகுவிமரிசையாக நடந்தது.