பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், அரியலுார் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மணியன் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மண்ணில் கிடந்த பலகை குறுஞ்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: இந்தச் சிற்பம், பல்லவர் காலத்தியது என்று கருத முடிகிறது. ஒன்றரை அடி அகலமும், ஒன்றரை அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக அய்யனார் செதுக்கப்பட்டுள்ளார். வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு இதுபற்றிய விபரம் தெரியாததால், பொது வெளியில் வேப்பமரத்திற்கு கீழே இந்த அய்யனார் சிற்பத்தை வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.