பதிவு செய்த நாள்
24
ஏப்
2024
06:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், பழைய நெல்லுக்கார தெருவில் கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில் அமைந்துள்ளது.
கேது திசை, புத்தி, அந்தரம் மற்றும் கேதுவினால் வரும் தோஷங்கள் பூர்வ ஜென்ம பாவங்கள், தடைபடும் திருமணம், குழந்தைபேறு கிடைக்க, மனக்குழப்பம் அகல சித்ரகுப்தர் துணைபுரிகிறார். ஆயுள் பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்றவை நீங்க சித்ரகுப்தரை பக்தர்கள் வழிபடுகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்த கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறை வாயிலாக நிர்வாக திட்டப்படி கருணீகர் குலத்தில் இருந்து அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம், இரவு 9:30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. தொடந்து சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று, காலை 4:00 மணிக்குள் ஸ்தபன ஹோமபூஜையும், காலை 5:30 மணியில் இருந்து இரவு 10:00 மணி வரை சித்ரா பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் இரா.வான்மதி, உதவி ஆணையர் பொ.லஷ்மிகாந்த பாரதிதாசன், அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.ரகுராமன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தே.சந்தானம், ரா.ராஜாமணி, கோவில் செயல் அலுவலர் மா.அமுதா, கோவில் அர்ச்சகர், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர். காஞ்சிபுரம் டி.எஸ்.பி., முரளி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.