பதிவு செய்த நாள்
03
நவ
2012
10:11
தென்காசி: தென்காசி பகுதியில் உள்ள கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. தெற்குமாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தென்காசி குலசேகரநாதர் கோயில், தென்பழனியாண்டவர் கோயில், முடுக்கு விநாயகர் கோயில், செண்பக விநாயகர் கோயில், கூலக்கடை பஜார் சந்தி விநாயகர் கோயில், ஒப்பனை விநாயகர் கோயில், அணைக்கரை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.
மேலகரம் விநாயகர் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில் விநாயகர் சன்னதி, இலஞ்சி குமாரர் கோயில் விநாயகர் சன்னதி, குன்னக்குடி விநாயகர் கோயில், சிவராமபேட்டை கற்பக விநாயகர் கோயில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் விநாயகர் சன்னதி, புளியரை, வடகரை, அச்சன்புதூர், கொட்டாகுளம், பிரானூர், வல்லம், குடியிருப்பு, ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சுந்தரபாண்டியபுரம், இலத்தூர், சீவநல்லூர், கணக்கப்பிள்ளைவலசை, விசுவநாதபுரம், கற்குடி, பெரியபிள்ளைவலசை பகுதி விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சிறப்பாக நடந்தது.
குத்துக்கல்வலசை பசிதுஷ்டராய கண்ட விநாயகர் கோயிலில் விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தென்காசி சுற்று வட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சிறப்பாக நடந்தது. இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.