பதிவு செய்த நாள்
06
நவ
2012
10:11
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெப்பக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதூரில் புகழ்பெற்ற, ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், தேரடி சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் நடுவில், நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்தில் ஆண்டு தோறும் நான்கு நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். அதைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக, குளத்தை சுற்றி சாலை அமைக்கப்பட்டது.தற்போது, தெப்பக்குளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட தெப்பக்குளம், சாலையை சிலர் ஆக்கிரமித்து, குடிசை போட்டனர். அவற்றுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டது. கழிவுநீர் கலப்பு குடிசை வீடுகள், நாளடைவில் நிரந்தர வீடுகளாக மாறின. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெப்பக்குளத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதனால், புண்ணிய தீர்த்தம் என்று பெயர் பெற்ற கோவில் தெப்பக்குளம், கழிவுநீர் குட்டையாகி விட்டது. இதனால், ஆண்டாண்டாக நடந்து வந்த பிரபலமான தெப்போற்சவம் நிறுத்தப்பட்டது.தெப்பக்குளம் இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு முன்பாக, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், தெப்பக்குளத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, குளத்தை சீரமைத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தயக்கம்: இதையடுத்து, ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 10 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கியதோடு அதிகாரிகள் அமைதியாகிவிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றுவதில், கோவில் நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது என, பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:ஆக்கிரமிப்பாளர்கள் 30 பேருக்கு, இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. சில தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.