பதிவு செய்த நாள்
16
மே
2024
01:05
மானாமதுரை; மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் 44 வது ஆண்டு ஆராதனை விழாவில் ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர், கொல்கத்தா, காசி,பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி ஆகிய 5 இடங்களில் அமைந்துள்ளது. இந்நிலையில் வருடம் தோறும் இந்த ஊர்களில் ஆராதனை விழா தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். மானாமதுரையில் நடைபெறும் இந்த ஆராதனை விழாவின் போது இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா இன்று (16ம் தேதி) காலை 8:00 மணிக்கு துவங்கியதை தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.பின்னர் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்களின் வாய்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கச்சேரிகளும், குரு அஞ்சலி, உஞ்சவ்விருத்தி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர, வடுக,கன்யா சுவாசினி,தம்பதி பூஜைகள், இசை நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள், பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாளை 17ம் தேதி இரவு ஆராதனை விழா முடிவடைகிறது.ஆராதனை விழாவிற்கான ஏற்பாடுகளை சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை குழு டிரஸ்டிகள் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், ஸ்ரீவித்யா ராஜகோபாலன்,ஸ்ரீதரன் ,ஸ்ரீராமன், கிளீவ்லேண்ட் சுந்தரம்,முரளி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.