பதிவு செய்த நாள்
16
மே
2024
04:05
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து ஆய்வு மேற்கொண்டதில், தீர்த்தம் அடுத்த ஹளே கிருஷ்ணாபுரம் கிராமத்தில், 586 ஆண்டு பழமையான விஜயநகரர் காலத்து, கல்வெட்டு ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிராமம் நடுவே, பசப்பா என்பவரது வீட்டின் அருகே கருங்கல் குண்டை சுற்றிலும், 20 அடி நீளத்தில், 7 வரிகளில் இக்கல்வெட்டு உள்ளது. மேல்புறம் திரிசூலமும், கீழ்புறம் அழகிய காளையும், அருகே குடை மற்றும் கொடியும் கோட்டுருவமாய் காட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு, 586 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர மன்னர், 2ம் தேவராயன் காலத்தை சேர்ந்தது. அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய முள்வாய் ராஜியத்தை (தற்போது கர்நாடகா மாநிலம் முலுபாகல்) லக்கண தண்ணாயக்கர் ஆண்டு வந்தார். இங்கு தியாகப்பெருமாள் என்னும் பெயரில் சிவன் கோவில் அப்போது இருந்துள்ளது. அக்கோவில் பூஜை செலவிற்காக பொன்னக்கோன் பள்ளியை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. ஹளே கிருஷ்ணாபுரம் அக்காலத்தில் பொன்னக்கோன்பள்ளி என்று அழைத்ததும், இவ்வூருக்கு அருகில் தியாகப்பெருமாள் என்ற பெயரில் சிவன் கோவில் இருந்ததும், இக்கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார். இதில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சின்னகொத்துார் மணிகண்டன், நல்லுார் பஞ்., தலைவர் கல்யாணி ஆகியோர் உடனிருந்தனர்.