சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2024 05:05
நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக அருள் பாலிக்கும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான இன்று (16ம் தேதி) காலை 6:00 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8:30 மணிக்கு விநாயகர் தேரில் விநாயகர், அம்மன் தேரில் சுவாமி அம்பாள் மற்றும் பெருமாள், சப்பர தேரில் அம்மன் விக்ரகங்கள் வைக்கப்பட்டு வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவு 9:00 க்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சப்தாவரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10- ம் நாள் விழாவான நாளை காலை 10:30க்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். இரவு 8:30 க்கு சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அலங்கரிக்க செய்து தெப்பத்தில் வைத்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு ஆராட்டுடன் திருவிழாநிறைவு பெறுகிறது.